டீன் ஏஜ் பருவத்தின் பத்து பிரதான பிரச்சனைகளும் தீர்வுகளும்!

குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப்போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத்தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கிவிடுகின்றன. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்சனைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத்திற்கு வருபவை எவை தெரியுமா?

1. படிப்புல வீக்"அஞ்ஜாம் கிளாஸ் வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னனே தெரியல, வர வர படிப்புல ரொம்வ வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை" என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், "எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது" என்கிறார்கள், அல்லது, "புக்கை திறந்தாலே, பகல் கனவா வருது" என்கிறார்கள். பரிசோதித்து பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மக் அடித்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரியவரும். இந்த "டப்பா அடிக்கும்" பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே.
.
ஆனால் பெரிய கிளாஸ் போக போக, பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்துக்கொள்ள வேண்டிய மேட்டரின் அகலமும் அதிகம் என்பதால் இந்த மனப்பாட யுத்தி அதற்கு மேல் பிரயோஜனமே படாது.
முழு பாடத்தையும் அப்படியே முறுக்கி பிழிந்து வெறும் முக்கியமான சாரை மட்டும் கரந்தெடுத்து, கரைத்து குடிக்கும் யுத்திகள் பல உள்ளன. நியாயமாய் பாடம் நடத்தும் ஆசிரியர்களே இந்த யுத்திகளையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லித்தந்தால் தான் கற்றவை நிற்கும் அதற்கு தக. ஆனால் என்ன செய்வது, இந்த யுத்திகளை எல்லாம் சொல்லித்தர ஆசிரைய பெருமக்களுக்கு நேரம் இல்லா காரணத்தினால், இதையெல்லாம் தனியாக சொல்லித்தர வேண்டியுள்ளது. இப்படி புரிந்து, படித்து, கிரகித்துக்கொள்ளும் யுத்திகளை தெரிந்துக்கொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் முன்னே பின்னே என்று இருக்கும் மாணவர்களுக்கு மூளையை கூராக்கும் சில ஊக்க மாத்திரைகளை கொடுத்து முன்னேற்ற பார்க்கலாம்.

2. ஓவர் டென்ஷன்:
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாய் எல்லா பதின்பருவக்கார்ர்களை பற்றியும் வரும் அடுத்த புகார், இந்த முன்கோபம். அது வரை சொல் பேச்சை கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதை தொட்ட உடனே, "எல்லாம் எனக்கு தெரியும், நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்". என்று பெற்றோரையே எதிர்த்து பேசிவிடுகிறார்கள். சரி பிள்ளை தான் ஏதோ மனநிலையில் ஏடா கூடமாக பேசுகிறதே, நாமாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போவோமே என்கிற விவஸ்த்தையில்லாமல் பெற்றோர், "உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு, பெத்து வளர்த்து, இவ்வளவு பெரியா ஆளாக்கினேன், என்னையே நீ...." என்று முழம் முழமாய் லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட, பொருத்து பொருத்து பார்த்து விட்டு, "உங்களை யாரு பெக்க சொன்னா?" என்று பொறித்து தள்ளிவிடுகிறார்கள் பிள்ளைகள். உடனே தாய் மார்கள் எல்லாம் மனமுடந்து போய், இந்த பிள்ளைக்காக நான் என்னவெல்லாம் செய்திருப்பேன், என் அருமை புரியாமல் என்னையே இப்படியெல்லாம் ..." என்று இன்னும் நொந்துப்போகிறார்கள்.

இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்த்தில் எக்கசெக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதிற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூடி அவுட் என்று இள ரத்தம் எப்போதுமே ஒரு சல சலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். எதையும் சகித்துக்கொள்ளும் தன்மை, பொருத்துபோகும் பக்குவம், அடங்கி போகும் லாவகம் எதுவுமே இந்த வயதில் ஏற்படுவதில்லை. இதை புரிந்துக்கொண்டு, பெரிசுகள் நாம் மிக பக்குவமாய், ஹாசியமாய், தோழமையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களை கையாண்டால் தான் ஹார்மோன்களின் ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள். இதை விட்டு விட்டு, "முளைச்சி மூணு இலை விடலை, அதுக்குள்ள இவ்வளவு திமிரா, உனக்கே இவ்வளவுனா, எனக்கு எவ்வளவு இருக்கும்" என்று போட்டிபோட்டுக்கொண்டு, அவர்களை விட அதிக முதிர்ச்சியின்மையை பெரிசுகள் வெளிபடுத்தினால், பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் சிறியவர்கள் சினம் கொள்ளும் போது இந்த மாதிரி கோபதாபங்களை எப்படி நேர்த்தியாய் சமாளிப்பது என்பதை கற்றுத்தர இதையே ஒரு சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டு, பெரியவர்கள் சாந்தமாய் விஷயத்தை கையாண்டாலே போதும். மனிதர்கள் இயல்பிலேயே மற்றவர்களை பார்த்து காப்பியடித்து தான் பலதும் பற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதால், முன் மாதிரி சரியாக் இருந்தால், இளைஞர்களும் தங்களை திறித்திக்கொள்வார்கள்,

3. ஓவர் கூச்சம்:
"விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை, கடைக்கு போனால், எல்லாரும் பார்க்குறாங்க, நான் இந்த பையை தூக்கீட்டு வந்தா சிரிப்பாங்கனுறது, மத்தவங்க முன்னாடி என்னை பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது..." இப்படியாக, பதின் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வை பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது, இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசி போக செய்கிறது. போக போக இந்த கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, "ஆமா, நான் இப்படி தான், எனக்கு என்னை பிடிச்சிருக்கு, வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை" என்று சுயமதிப்புக்கொள்ளவும் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுவாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன- அதுவரை இந்த வெட்கத்தை பெரிது படுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள் இளையவர்கள்.

4. பியர் பிரஷர்.
பதின் பருவத்தினருக்கு தங்கள் சமவயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அனுகுகிறார்கள் என்பதை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதை போலவே தானும் இருந்தால் தான் தன்னை "செட்டில் சேர்த்துக்கொள்வார்கள்" என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்துவிட முயல்கிறார்கள். "உன் ஃபிரெண்டு சொன்னா தான் கேட்பியா? நான் சொன்னா கேட்க மாட்டியா?" என்று பெரிசுகள் என்ன தான் தலை பாடாய் அடித்துக்கொண்டாலும் இளையவர்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் பெற்றவர்களை விட இந்த மாதிரி சமவயதுக்கார peersசிடமிருந்து அதிக விஷயங்களை கற்றுக்கொள்ளூம் படியாகத் தான் மனித மூளையின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்த இயற்கை ஏற்பாட்டை மீறி அவர்களால் செயல் படமுடியாது. "அப்படினா, கண்டவங்களோட சேர்ந்து கெட்டு குட்டிசுவரா போயிட்டா?" என்று பெற்றவர்கள் பதைபதைக்கத் தான் செய்வார்கள். இதற்கு ஒரே வழி, உங்கள் குழந்தையின் பியர்களை பரிச்சையபடுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாக க்ண்காணித்தால் தானே, அவர்கள் போக்கு எப்படி என்பதை நீங்கள் சதா கண்காணிக்க முடியும்.

5. வயதிற்கு வருதல்: பெண்களூக்காவது பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர்வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்கு வருதல் அனுபவத்தை பற்றி பேசி பகிர்ந்துக்கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்கு வரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது. பாவம், ஆண் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்படியே விடபடுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இருப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் வயதுக்கு வருதல் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர்கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப் கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, "அய் நான் வயதுக்கு வந்துட்டேனே," என்று எண்ணி பெருமை கொள்ள வேண்டிய வாலிவன், "அய்யோ, எனக்கு வியாதி வந்துவிட்டது" என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.
.
"விந்து வெளியேறி விட்டது, அதனால் சாக்க்கிடக்கிறேன்" என்ற வகை புகாருடன் ஆலோசனை பெற வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நல்ல வேலையாக இப்போதெல்லாம் குறைந்துக்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவியலை புரிந்துக்கொண்ட அறிவாளிகள் ஆகிவிட்டார்கள் போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இந்த பிரச்சனையோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூட நம்பிக்கைகளை தெளிவு படுத்தி, அநாவசிய பதட்டத்தை தணிக்கும் மருந்துகளை கொடுதாலே போதும், "இதெல்லாம் ஒரு மேட்டருனு யாராவது கவலைபடுவாங்களா!" என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள் எல்லாம்.

6. சுய இன்பம்:
என்ன தான் வேற்று கிரகத்தில் கொண்டு போய் வைத்து எவர் சவகாசமும் இல்லாமல் குழந்தையை மஹா பவித்திரமாக வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முயன்றாலும் பருவ வயது வந்ததுமே பாலுணர்வும் தலை தூக்கிவிடும். நூறு ஆண்டுகளுக்கு முன் என்றால் இந்த பருவம் வந்த உடனே திருமணம் என்று ஒன்றை நடத்தி, ஒரு கலவியல் துணையை பெற்றோரே ஏற்பாடு பண்ணித் தந்திருப்பார்கள், தாபம் தோன்றும் போதெல்லாம் தாம்பத்தியம் கொள்ள ஏதுவாக இருந்துருக்கும். ஆனால் இந்த நூற்றாண்டிலோ, வயதிற்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் திருமணம் என்று நிலைப்பாடுகள் மாறிவிட்டன. இதை பற்றி எல்லாம் சட்டையே செய்யாமல் இயற்க்கை இன்னமும் அதே பதிமூன்று – பதினேழு வயதிற்குள் எல்லோரையும் வயதிற்கு வர வைக்க, கூடவே தலையெடுக்கும் உடல் ரீதியான தேவைகளை எப்படி சமாளிப்பது என்று யாருமே சொல்லி தருவதில்லை.
.
தாபம் ஏற்படும் போதெல்லாம் தன்னை தானே சாந்தப்படுத்திக்கொள்ளும் டெக்னிக்கை அநேகமாக எல்லா ஆண்களும் சுயமாகவே தெரிந்துக்கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய குற்றம் என்று சிலருக்கு தோன்றுவதால், கவலை பட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் இதில் பெரிய ஆட்சரியம் என்ன தெரியுமா? அமெரிக்கா, ஐரோபா, ஆஸ்திரேலியா, ஸ்காண்டினேவியா மாதிரியான பகுத்தறிவு அதிகம் உள்ள நாடுகளில் எந்த ஆணும் சுயஇன்பத்தை பெரிய தவராகவே நினைப்பதில்லை. பாலில்லாத குறையை போக்க, குழந்தை கையை சுவைப்பது போல, துணையில்லா சமயத்தில் தாபத்தை தணிக்க இது ஒரு சிம்பிள் டெக்னிக், இதில் பெரிதாக ஃபீல் பண்ண என்ன இருக்கிறது என்பது இவர்களது மனப்பான்மை. ஆனால், இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தான், அதுவும் படிக்காத ஆண்களிடம் தான் சுய இன்பத்தை பற்றின அநாவசிய பயங்களும் குற்ற உண்ர்வும் இருக்கிறது. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இதே இந்தியாவில் தான் அந்த காலத்தில் 'ஜீவ காருண்யம்' என்ற பெயரில், பொது இடங்களில் நடுகல்லை நிறுத்திவைக்கும் வழக்கம் ஒரு தர்ம காரியமாய் கருதப்பட்டு, பலரால் பின்பற்ற பட்டது. நடு கல்லை நடுவதில் என்ன பெரிய ஜீவ காருண்யம் என்று யோசிக்க தோன்றூகிறதா? போகிற வருகிற மிருகங்களுக்கு மதம் பிடித்தால், இந்த கல்லில் உராய்து சாந்தபடுத்த உதவுவது, புண்ணியங்களில் சிறந்த புண்ணியமாய் கருதப்பட்ட்து. ஆக, மிருகங்கள் சுய இன்பம் புரிய கூட சாதனங்களை ஏற்பாடு செய்து கொடுத்த கலாச்சாரத்தில், மனிதன் சுய இன்பம் கொள்வதை பற்றி இத்தனை மூட நம்பிக்கைகள் தோன்றியது வேடிக்கை தான்! ஆக, மனிதர்கள் உட்பட, எல்லா ஜீவராசிகளிலும் தகுந்த துணை இல்லாத போது சுய இன்பம் கொள்வது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையே. என்ன, நடுகல்லே கதி என்று இதே வேலையாய் இருக்காமல், விளையாட்டு, படிப்பு, பாட்டு, கூத்து, கேளி, கும்மாளம் என்று வேறு பல வழிகளிலும் சுகம் காணும் தன்மையை வளர்த்துக்கொண்டால், இன்பம் கொள்ளை கொள்ளையாகுமே!

7. முதல் காதல்: மூளை சுரக்கும் ஹார்மோன்கள் ஏற்கனவே எதிர் பாலின கவர்ச்சியை தூண்டிவிட, கூடவே உடகங்களும், அதன் ஊக்கத்தால் நண்பர்களும் "சூப்பரா இருக்கும் செய்து பார்", என்று காதலை பெரிதும் சிபாரிசு செய்ய, கேட்க வேண்டுமா! காதல் என்கிற போதை இளமனதுகளை ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் "எட்டாவது தான் படிக்கிறா, அதுக்குள்ள காதல் என்ன வேண்டி கிடக்குது. வயசுக்கு மீறுன வேலையெல்லாம் செய்யுறாளே" என்று பதறும் தாய்மார்கள் பலர்.
.
உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இது தான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும் படியாக தான் இயற்கை மனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதராதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் ஊருகின்றன, அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி.
.
ஆனால் இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரை பிடியுங்கள். அல்லது ஒரு கவின்சிலரை அனுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களை பற்றி விளையாட்டாக பேசி புரியவைத்தாலே, 'ஓகோ, இது இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒரு மிக சாதாரண் உணர்ச்சி தான்', என்பதை புது இளைஞி புரிந்துக்கொள்வாள். இந்த புரிதலே அவள் முதல் காதலின் புனிதத்துவத்தை குறைத்து விடும் என்பதால், கொஞ்ச நாள் கழித்து இந்த உணர்வு அவளுக்கே போரடிக்க ஆரம்பித்துவிடும். சினிமாவில் சொல்வது போல காதல் அவ்வளவு ஒன்றும் ஸ்வாரசியமான உணர்வு இல்லை என்று புரிந்த்துமே, அதன் போதையிலிருந்து அவள் வெளி வந்துவிடுவாள்.

8. மூட் அவுட்பதின் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோவம், திடீர் அழுகை, திடீர், "என்னை கண்டாலே யாருக்கு பிடிக்கல!" மாதிரியான உணர்ச்சிவெடிப்புக்கள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்ததில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருனிலைபடாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள் "என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!" என்று புலம்பி அழுவதும், ஆண்கள் "என்னை கவனிக்கிறதே இல்லை" என்றி எரிந்துவிழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, ரசாயண ஸ்ருதிபேதத்தினால். அதனால் சிறுசுகளோடு சரி சம்மாய் கத்தி சண்டையை பெரிதாக்காமல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரியவைக்க முயன்றால் தான் குடும்ப நிம்மதியை காப்பாற்ற முடியும்.

9. ஆக்ரோஷம். குறிப்பாக நிறைய இளைய ஆண்களை அவர்களது பெற்றோர்கள் இந்த காரணத்திற்காக தான் சிகிச்சைக்கை அழைத்து வருகிறார்கள். "முன்னெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு குட் பாயா இருந்த பையன் தான். பெரியவங்கன்னா அவ்வளவு மரியாதையா இருந்த பிள்ளை, இப்ப எல்லாம், நீ சொன்னா, நான் கேட்கணூமானு எதிர்த்து பேசுறான். அடிக்க கைய ஓங்குனா, பதிலுக்கு அடிக்க வர்றான். நேத்து ஏதோ திட்டினேனு ரிமோட்டை தூக்கிஎரிஞ்சதுல அது ஒடஞ்சே போச்சு. எங்கிருந்து தான் அவனுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதோ?"
வேறெங்கும் இல்லை. அதே ஹார்மோன்கள் தான். ஆண் குழந்தை வயதிற்கு வருவதே டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனின் சுரத்தலால் தான். இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து விட்டால், ஆக்ரோஷம் ததும்ப அரம்பித்துவிடும், உடல் பலம் அதிகரித்து விடும், எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். பழக பழக டெஸ்டோஸ்டீரானின் இந்த தன்மையை எப்படி சாமார்தியமாய் கையாள்வது என்பதை இவர்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்வார்கள் தான் என்றாலும் வயதிற்கு வரும் போதே இந்த உணர்ச்சி மேலாண்மை எதுவும் சாதியமாவதில்லை தானே. அதனால் தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை ஓவராய் மிரட்டி அவன் "நானும் ஆம்பிளை தான்" என்கிற ஆக்கிரோஷத்தை கிளறாமல் முடிந்த மட்டும் அன்பாய் பேசி, தண்டத்தை எடுக்காமல் வெறும் சாம, தான, பேத முறைகளிலேயே இளம் ஆண்களை கையாள்வது தான் புத்திசாலி தனம்.

10. தீயவை தீய பயத்தலால்.....
குழந்தை பருவம் போய் வாலிய வயதை அடைய போகும் எக்களிப்பில், எதை எதையோ பரிட்சை செய்து பார்க்க தோன்றும் இள மனம். புகை, மது, மாது, பிற போதை வஸ்துக்கள் என்று களவும் கற்றுமறக்க முயலும் வயது இது தான். இந்த போதை வஸ்துக்கள் கூட ஒரு வகையில் மனிதர்களை தரம் பிரித்து யார் பிழக்க தோதானவர்கள் என்று சோதித்து பார்க்கும் ஒரு test for survival தான். இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்களே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள் ஆகிறார்கள். ஏன் தெரியுமா? பெட்டிக்கடையில் சின்ன சின்ன பாக்கெட்டில் தொங்கும் வாசனைமிக்க பான் ரக பொருளானாலும், ஃபாரின் சரக்கு, ஒஸ்தி சரக்கு, லோக்கல் சரக்கு என இந்த வகை மது பானமானாலும், அவ்வளவு ஏன், சட்டம் போட்டு தடுக்கப்படும் மிக மோசமான போதை பொருட்களானாலும், அவை எல்லாமே அடிப்படையில் வேலை செய்கின்ற விதம் ஒன்று தான். மூளையின் இன்ப மையத்தை தூண்டி, மதி மயக்குகின்றன. அத்தோடு, ஆண்மை/பெண்மை திசுக்களை அழித்து விடுகின்றன. ஆக, போதை வயப்பட்ட மனிதர்கள் இனபெருக்க வாய்ப்பை இழப்பது தான் இயற்கையின் ஏற்பாடு. இந்த விவரங்கள் எல்லாம் சிறுசுகளுக்கு தெரியாதென்பதால் விளையாட்டு தனமாய் போதை பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முறை மட்டுமே உபயோகித்தாலும், உடனே தொற்றிக்கொள்ளூம் தன்மை இருப்பதனால் தானே அதை போதை பொருள் என்றே சொல்கிறோம். ஆக சர்வைவலுக்கு ஃபிட் ஆன புத்திசாலிகள் அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று இந்த பழக்கதுக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஜகா வாங்கிவிடுவார்கள்.

எவ்வழி பெரிசுகள்...என்ன இருந்தாலும் பதின் பருவம் என்பது காற்றாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்த பதபடுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அனைகட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாரவது தேவை. அப்பா அம்மா, அண்ணன் அக்கா, ஆசிரியர், மதகுரு ஆகிய பெரிசுகள் எல்லாம் மொக்கை போடுங்கள், பெரிதாய் லெக்சர் அடிப்பார்கள். இப்படி இல்லாமல் தம்முள் ஒருவராய் இருந்து கேலிபேச்சு, சிரிப்பு, கலகலப்புடனே "சரக்கு வேண்டாம் மச்சி, இனிக்கு கிரவுண்டு பக்கம் போய் கலாய்சிட்டு வரலாம்" என்று வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனியரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும்.
.
இளைஞர்களுக்கு விளையாட்டாய் விவரங்களை சொல்லித்தர எப்போதுமே ஒரு மூத்த ஸ்நேகிதர் தயாராக இருப்பது அவசியம். சும்மா இளைஞர்களை குறை சொல்லிக்கொண்டில்லாமல் நம்மை போன்ற பெரிசுகள் எல்லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும், பதின் பருவ பிரச்சனைகளை தாண்டி பிரமாதமாய் வெளிவந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள்.
ஆக்கம்.. டாக்டர் ஷாலினி

Post a Comment

3 Comments

  1. இளைஞர்களைப் பற்றிய பதிவாயினும்
    அவசியம் பெரியவர்கள்தான்
    இதைப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்
    அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. பதின் பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அருமையாக எடுத்து உரைத்தீர்கள்..
    நல்ல பதிவு!!

    பதின் பருவத்தாரும் அறிய வேண்டிய தகவல்கள்;
    அதே நேரம் மூத்த பெற்றோரும் அறிய வேண்டியவை

    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  3. அறியவேண்டிய தகவல்கள். இன்று அதிகரித்து வரும் பிரச்சினையும் கூட

    ReplyDelete

Drop Anything