எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட்..ஏன்..?

நல்ல தரமான ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இதை தான் ஆங்கிலத்தில் ஷிவெல்ரி chivalry என்பார்கள். அதாவது பெண் வந்தால், அவளுக்காக கதவைத் திறந்து விடுவது, அவளை முதலில் போக வைத்து விட்டு, பிறகு தான் பின் தொடருவது, அவளுக்கு நாற்காலி இழுத்துப் போடுவது, முதலில் அவளுக்கு உபசரிப்பது.... இத்யாதி என்று ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வதுதான் குல மகனுக்குப் பெருமை.

பேருந்து வரிசையில் பெண்களைத் தள்ளி விட்டு, மகளிர் மட்டும் இருக்கைகளில், ``ஏன் நான் உட்காரக்கூடாதா?'' என்று அடம் பிடித்து உட்காரும் ஆண். மனைவி தலையில் எல்லா பாரத்தையும் கட்டி விட்டு, ஹாயாய் கைவீசி நடக்கும் ஆண். லிஃப்ட், சினிமா தியேட்டர் வாசல், ஹோட்டல் வாசல் மாதிரியான இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திபு திபு என்று கால்நடை மாதிரி முந்தி ஓடும் ஆண்கள். சட்டசபையின் பெண் சகா வந்தால் அவளுக்கு வழிவிட்டு நடக்கும் நாகரிகம் கூட இல்லாமல், ``பொம்பளை எனக்கு பின்னால்தான் வரணும்'' என்று வறட்டு இறுமாப்புடன், பந்தாவாய் முந்தி நடந்து போகும் ஆண்கள்.... இவர்கள் எல்லாம் ஓர் அடிப்படை நாகரிகத்தை உணரத்தவறியவர்கள்.

எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று பெண்களுக்கு முன் உரிமையைத் தருவது தான் உச்சக்கட்ட ஆடவர் குணம். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்களே. அதில் அந்த பெரிய கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்ததும், கேப்டன் லைஃப் போட்டுகளை அவசரமாக இறக்கி, ``பெண்களும், குழந்தைகளும் முதலில் செல்லுங்கள்'' என்பாரே. கவனித்தீர்களா?

ஏதாவது ஊருக்குப் போக நீங்கள் விமானம் ஏறினால், எடுத்த எடுப்பில் வரும் முதல் பாதுகாப்பு அறிவிப்பில், ``விமான விபத்து ஏதும் நேரிட்டால், உங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, அவசர வாசலுக்கு வந்துவிடுங்கள். முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேற வேண்டும், பிறகு ஆடவர்கள் வெளியேறலாம்'' என்று தானே கூறுகிறார்கள்.

ஏன் அப்படிக் கூறுகிறார்கள். மூழ்கும் கப்பல், எரியும் விமானம் மட்டும் அல்ல, எங்கு உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் மகளிரையும், பிள்ளைகளையும் தான் உடனே காப்பாற்ற வேண்டும் என்பது தான் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் பொதுப் பயிற்சி.

அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தச் சிறப்பு கவனிப்பு என்று நீங்கள் யோசித்தால், இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.

இரண்டு தீவுகள். இரண்டிலுமே ஆயிரம் ஆண்களும் ஆயிரம் பெண்களும் இருப்பதாய் வைத்துக்கொள்வோமே. முதல் தீவில் ஆண்களுக்கு எல்லாம் ஏதோ விஷ ஜுரம் ஏற்பட்டு, ஒரே ஒருத்தனைத் தவிர மீதமுள்ள எல்லோருமே மர்கயா என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அந்த தீவில் ஆயிரம் பெண்கள் + ஒரே ஒரு ஆண் மட்டுமே.

அடுத்த தீவில் இதற்கு நேர்மாறாக பெண்களுக்கெல்லாம், விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, ஒரே ஒருத்தியைத் தவிர மீதமுள்ள 999 பெண்களும் மாண்டு விட்டதாய் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த தீவில் 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண்.

இப்போது சொல்லுங்கள், எந்தத் தீவில் ஜனத்தொகை சீக்கிரம் பெருகும்?
1000 பெண்கள் + ஒரே ஒரு ஆண் இருக்கும் தீவிலா? 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண் இருக்கும் தீவிலா? நிச்சயம் 1000 பெண்கள் இருக்கும் தீவில்தான் ஜனத்தொகை மட மடவென பெருகும். காரணம், ஒரே ஆணால் ஆயிரம் பெண்களையும் கருவுறவைக்க முடியும். ஆனால், ஆயிரம் ஆண்கள் ஆயிரம் தான் முயன்றாலும், ஒரு பெண்ணால் ஒரு கர்ப்பத்தில் சராசரியாய் ஒரே ஒரு பிள்ளையைத்தானே பெற்றெடுக்க முடியும்.

ஆக, எல்லா உயிரிலும் ஆணை விட பெண்ணின் உயிர் அதி முக்கியமானது. காரணம், அவள் வெறும் ஒரு தனி உயிர் மட்டுமல்ல, அவள் எதிர்கால ஜனத்தொகையின் ஒரு சின்னம். அவள் இல்லை என்றால், வம்சம் விருத்தி அடைய முடியாது என்பதால்தான் ரொம்பவும் நேர்த்தியான கலாச்சாரங்கள் பெண்களைப் போற்றி, முன்னுரிமை தந்து கவுரவிக்கின்றன.

-டாக்டர் ஷாலினி

Post a Comment

3 Comments

  1. நண்பரே ...ரொம்ப நல்லா சொல்லியிருக்கிறிங்க ...
    அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  2. சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete

Drop Anything